Monday, May 5, 2025

இசை

அழவைக்கும் அழகூட்டும்,
உணர்வூட்டும் உயிரூட்டும் 
உச்சி முகர்ந்து 
உறங்க வைக்கும்,
உறங்காமல் 
விழிக்க வைக்கும்,
கலங்கடிக்கும்
கட்டியும் அணைக்கும்,
காலத்தைச் சுருக்கிவிட்டுக் 
கடந்தவற்றை நினைவூட்டும்,
நினைவுகளை நீட்டிவிட்டு
நீண்ட தூரம் கூட வரும்,
சுருக்கமாகச் சுகமளித்து
சுதந்திரத்தின் அடிமையாக்கும்,
மண் வாசனையில் 
மயங்க வைக்கும்,
மதியை மறக்கடிக்கும்,
கள்ளுண்ணாமலே  
போதை தரும்,
கலவியின்றி 
உச்சமும்  தரும்,
காதலையோ கொண்டாடும் - ஆனால்
காற்றின் வழி வந்து 
காலத்திற்கும் கூட வந்து 
உயிரினிலே கலந்தாலும்
புரிவதேயில்லை... 
இசை!

Sunday, May 4, 2025

பிரிவு

விடுமுறையில் 
நீ தாய் வீட்டில்,
விடுதலையில் 
நான் தனிக் கூட்டில்,
சீரில்லா  இத்தனிமை 
சிறப்புதான்  என்றாலும் 
சீமாட்டி நீ இல்லாமல் 
சிகரம் தொட்டு 
என்ன பயன் - என 
தாய் வீடு 
சென்றிருந்த - நீலத்தை
நினைத்து நினைத்து  
நிர்க்கதியாய்  நின்றிருந்த 
நிலவிடமே கேட்டுவிட்டேன் - ஆனால்
தொலை தூரம் - நீ 
சென்றாலும் 
தொலையாத 
உன் நினைவை - என் 
வீடெங்கும் ஒலித்திருக்கும்  
உன்  கொலுசொலி 
சொல்லியது, 
"இந்தத் 
தற்காலிகப் 
பிரிவு கூட - ஒரு
தரமான 
காதல் தான்!
"

Wednesday, April 30, 2025

நேர்மை

ரயிலுக்குச்  
சீட்டு எடுத்துவிட்டு,
ரசீதையும் வாங்கிவிட்டு, 
மீதச் சில்லறையை 
எண்ணிவிட்டு, 
மிக அதிகம் 
இருப்பதை - ஒருவன் 
அரசிடமே 
திருப்பிக் கொடுத்தால், 
அங்கே தான் 
அருகில்  
எங்கோ இருக்கிறான் 
என் அப்பன் 
குமரேசன்!

Tuesday, March 4, 2025

கூடல்


அதன் பின் 
யோசித்தேன்,
நீ இல்லையெனில் 
என்னாவேன் என்றெண்ணி - என்
உக்கிரத்தை உதறிவிட்டு 
உன்னிடமே ஓடி வந்தேன் - உன்
மனதளவில் எனை 
மன்னிக்கும் முன் 
கொஞ்சம் கட்டிக்கொள்,
நீ மன்னிப்பது - என் 
மனதுக்குக் கேட்க 
வேண்டுமல்லவா - இப்போதைக்கு
முத்தமெல்லாம்  வேண்டாம்,
இறுகக் கட்டிக்கொள் போதும்,
கொஞ்சம் மூச்சுத் திணறும்
விலகி விடாதே - பிடியை 
விட்டு விடாதே,
முடிந்தால் 
இன்னும் இறுக்கிக் கட்டு - உன் 
அன்பின் அரவணைப்பில்  - என் 
ஆணவங்கள் அழியட்டும்,
விலா எலும்புடன் சேர்ந்து
என் வினையெல்லாம் 
நொறுங்கட்டும் !

Tuesday, January 21, 2025

நிலவு

குளிராய் இதமாய் 
முழுதாய் முடிவாய்
பிறையாய் பிழையாய்  
மஞ்சளாய் சிவப்பாய் 
மதியாய் யுவதியாய்
மழலைக்குக் கதையாய்
மந்திர ஒளியாய் 
காதலின் துணையாய்
கதிரவனின் நட்பாய்
இரவின் கொடையாய்
இருளின் விளக்காய்
ஒளிந்தும் மறைந்தும்
வளர்ந்தும் தேய்ந்தும்,
பாசாங்காய்.. 

நிலவு!




Wednesday, December 4, 2024

வியனுலகு

வியனுலகே  
இனி அவனுலகு - அங்கே 
தூரங்கள் சென்று சென்று 
எல்லைகள் பல கடந்திடுவான் - பின் 
எல்லைகளைப் பொடியாக்கி 
ஓர் உலகம் செய்திடுவான்,
காலத்தின் கணக்குகளைக் 
காலடியில் மிதித்திடுவான்,
தீராத  வினையெல்லாம் 
தீயிலிட்டுப் பொசுக்கிடுவான்,
சாதனைகள் செய்திருந்தும்
சாந்தத்தில் வீற்றிருப்பான்,
மாறி மாறி உருவெடுத்து 
நம்மிடையே வாழ்ந்திருப்பான்,
மகத்தான வெற்றி பெற்று - நம் 
மனங்களிலே நிலைத்திருப்பான்,

அவனுலகு வியனுலகு 
அவனுக்கானது - அவ்வுலகில்  
வலியில்லை 
துயரில்லை,
பிணியில்லை 
பயமில்லை,
கலக்கமில்லை 
கடமையில்லை,
கண்ணீர் என்பது - இனி 
இல்லவே இல்லை,
ஆசைக்கும் அளவில்லை - அதை  
அடைவதற்குத் தடையுமில்லை 
ஆதலால் 
மகிழ்ந்தே இருப்பான் மகிழன்
 வியனுலகில் - இனி 
 என்றென்றும்...

"மகிழ்ந்தே இருப்பான்  மகிழன்"

Friday, March 4, 2022

ஊடல்


வெள்ளமெனப் பாய்ந்துவிட்டு
வெள்ளந்தியாய்ச் சிரிக்கின்றாய்,
வேரறுக்கும் புயலாகி 
வெண்சாமரம் வீசுகின்றாய்,
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்போதே 
கோபக்கனல் வீசுகின்றாய்,
சமாதானமாகி விட்டுச் 
சண்டைக்கு நிற்கின்றாய்,
உயிருக்குள் ஊடுருவி - பெண் 
உள்ளத்தை அளக்கும் கலை 
கடவுளுக்கு வசப்படலாம்,
கரிகாலனுக்கு இல்லையடி!